ஆர்மீனியா - அஜர்பைஜான் படைகளுக்கு இடையே வன்முறை - ஐநா- அமெரிக்கா கண்டனம்


ஆர்மீனியா - அஜர்பைஜான் படைகளுக்கு இடையே வன்முறை - ஐநா- அமெரிக்கா கண்டனம்
x
தினத்தந்தி 28 Sep 2020 12:54 AM GMT (Updated: 28 Sep 2020 12:54 AM GMT)

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே நடந்த சண்டையில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன். இதன் காரணமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அஜர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய படைகள் அஜர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக் மற்றும்  அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸ், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான “புதிய போர் மீண்டும் தொடங்குவது குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

"உடனடியாக சண்டையை நிறுத்தவும், பதற்றங்களை குறைக்கவும், தாமதமின்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பவும் பொதுச்செயலாளர் அழைப்பு விடுக்கின்றார்" என்று குத்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே வன்முறை அதிகரித்து வருவதை அமெரிக்கா கண்டித்துள்ளது, இரு தரப்பினரும் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள  அறிக்கையில் இரு தரப்பினரும் உடனடியாக வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கூறி உள்ளது.

Next Story