முக கவசம் மற்றும் சமூக இடைவெளி தொடர்பான டிரம்ப் கருத்து - ஜோ பிடன் கடும் விமர்சனம்


முக கவசம் மற்றும் சமூக இடைவெளி தொடர்பான டிரம்ப் கருத்து - ஜோ பிடன் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 6 Oct 2020 9:03 AM GMT (Updated: 6 Oct 2020 9:03 AM GMT)

முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத அதிபர் டிரம்பை, ஜனநாயக கட்சி அதிபர் ​வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு திரும்பி உள்ளார்.

வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில்  உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப்,   புகைப்படத்திற்கு தம்ஸ் அப் காட்டினார். அப்போது, மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் டிரம்ப் வைத்துக்கொண்டார்.  மேலும், கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் டிரம்ப் கூறினார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில்,  தொற்று பாதித்த டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது  சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. மேலும் அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்று கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் எனவும், அதை நமது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத அதிபர் டிரம்பை, ஜனநாயக கட்சி அதிபர் ​வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார். நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்பின் பேச்சு பொறுப்பற்றது என்று தெரிவித்துள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் முக கவசம் தேவையில்லை, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டாம் என சொல்வது பொறுப்பான செயலா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய அதிபர் டிரம்ப் மக்களுக்கு, முக கசவம் தொடர்பான சரியான பாடத்தை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைக் குடித்த, நோய் தொற்று பற்றி தவறாக டிரம்ப் பேசி வருவதாகவும் ஜோ பிடன் சாடியுள்ளார். 

Next Story