அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வருவது எப்போது? - புதிய தகவல்


அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வருவது எப்போது? - புதிய தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2020 12:53 AM GMT (Updated: 17 Oct 2020 12:53 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பலன் அளிக்கிறதா என்பது அக்டோபர் இறுதியில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்குள் கொரோனா தடுப்பூசி வந்துவிடுமா என்ற கேள்வி எழுந்தது. மாடர்னா நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசி, தேர்தலுக்கு முன்பாக வராது, நவம்பர் 25-ந் தேதிவாக்கில்தான் பயன்பாட்டு அங்கீகாரம் கோரப்போகிறது என தெரிய வந்து விட்டது.

இந்த நிலையில் அங்கு பைஸர் நிறுவனம், ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி எப்போது வரும், அவசர பயன்பாட்டுக்கு அனுமதி பெற்று வந்துவிடுமா என்ற கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசி சோதனைகள் எல்லாமே நன்றாக சென்றாலும், நவம்பர் 3-ம் வாரம் வரையில், பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர கால அங்கீகாரத்தை கோர முடியாது என அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அவர் கூறும்போது, கொரோனாவுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி பலன் அளிக்கிறதா என்பது அக்டோபர் இறுதியில் தெரியவரும் என குறிப்பிட்டிருந்தார். அதில் ஒரு பகுதிதான் இப்போது தெரிய வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 44 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டுக்கு வருவது தாமதிக்கும். எனவே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story