அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் - டிரம்ப் பேச்சு


அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் -  டிரம்ப் பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2020 5:29 AM GMT (Updated: 18 Oct 2020 5:29 AM GMT)

அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பிரசாரத்தில் கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்து வருகிறார்.  அவரது பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது.  இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.  

இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாவது:-

நான் ஒரு வேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தோற்று விட்டால் அப்புறம் தனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன். எனக்கு தெரியாது. 

நான் இந்த உலகத்திலேயே சிறப்பான பணம் வசூலிப்பாளன். நான் நினைத்து இருந்தால் இன்னும் அதிகமான பணத்தை தேர்தல் செலவீனத்துக்கு பெற்றிருக்க முடியும். ஆனால் எனக்கு அது வேண்டாம்.

அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நானாகத்தான் இருப்பேன். ஆனால் ஆப்ரஹாம் லிங்கன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் தொப்பி அணியும் ஸ்டைலை முறியடிப்பது மிகவும் கஷ்டம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story