சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு
சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய ராணுவ உளவு அதிகாரிகள் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதித்துறை கூறுகையில், “ ரஷ்ய ராணுவ உளவு முகமையின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் 6 பேர், அழிவுகரமான மற்றும் அதிநவீன ஹேக்கிங் தாக்குதல்களை கடந்த 2015 முதல் 2019 வரை பல்வேறு இடங்களில் நடத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டுள்ளது.
உக்ரைன் பவர் கிரிட் மீது நடத்தப்பட்ட ஹேக்கிங்கால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது. அதேபோல், குளிர் கால ஒலிம்பிக் மற்றும் பிரான்சு தேர்தல் ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் மால்வேர் மூலமாக ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் இது தொடர்பாக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யபடவில்லை.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது அது தொடர்பான தரவுகளை கொண்ட கணிணிகளை ஹேக் செய்ததாகவும், பிரான்சு அதிபர் தேர்தலின் போது, முக்கிய நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ஹேக்கிங் செய்து வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story