ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன; அதிபர் ஏஞ்செலா மெர்கல் அச்சம்


ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன; அதிபர் ஏஞ்செலா மெர்கல் அச்சம்
x
தினத்தந்தி 24 Oct 2020 8:25 PM GMT (Updated: 24 Oct 2020 8:25 PM GMT)

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன என அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

பெர்லின்,

ஜெர்மனியில் அதிபர் ஏஞ்செலா மெர்கல் வழக்கம்போல் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  அதில் அவர் கூறும்பொழுது, கொரோனா பாதிப்புகளின் அதிதீவிர கட்டத்தில் நாம் இருக்கிறோம்.  நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன என அச்சம் தெரிவித்து உள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு தொடங்கியபொழுது இருந்த நிலையை விட இந்த தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

கோடைக்காலம் முடிந்து விட்டது.  குளிர்காலத்தில் நாட்டு மக்கள் எப்படி செயல்பட போகிறார்கள்.  எப்படி கிறிஸ்மஸ் கொண்டாட போகிறார்கள் போன்றவற்றை சார்ந்தே கொரோனா பாதிப்புகள் இருக்கும்.  பயணங்கள், வெளியே கூட்டங்களுக்கு செல்வது மற்றும் வெளியில் சுற்றி திரிவது ஆகியவற்றில் இருந்து நாட்டு மக்கள் விலகி இருக்க வேண்டும் என மெர்கல் கேட்டு கொண்டார்.

முழுவதும் அவசியம் என்றில்லாத நிலையில், தயவு செய்து பயணம் மேற்கொள்ளாதீர்கள்.  அத்தியாவசியம் என்றில்லாத சூழலில் கொண்டாட்டத்தில் ஈடுபடாதீர்கள்.  உங்கள் நகரில், உங்கள் வீட்டில் எங்கு சாத்தியமோ அங்கேயே தங்குங்கள் என கூறினார்.

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 14,714 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது கொரோனா பாதிப்புகள் ஏற்பட தொடங்கிய பின் ஒரு நாளில் பதிவான மிக அதிக உயர்வாகும்.

Next Story