இந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை - அமெரிக்கா அறிவிப்பு


இந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை - அமெரிக்கா அறிவிப்பு
x

இந்தியா, சீனா இடையேயான எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்கதையாய் நீடித்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளை இந்திய படைவீரர்கள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன துருப்புகளும் கணிசமாக உயிரிழந்தனர்.

மீண்டும் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி கிழக்கு லடாக்கில், பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றபோது, இந்திய வீரர்கள் அதை முறியடித்தனர். தொடர்ந்து லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பிலும் பெரும் படைகளை குவித்து வைத்திருப்பதால் பதற்றம் தொடர்கிறது.

இன்னொரு பக்கம் இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலும், ராணுவ மட்டத்திலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தாலும் எல்லையில் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டுகிற விதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும், ராணுவ மந்திரி மார்க் எஸ்பரும் டெல்லி வருகின்றனர். இவர்கள் இருவரும் 27-ந் தேதி இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கருடனும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இந்த சூழலில் வாஷிங்டனில் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்திய, சீன எல்லை மோதல் பற்றி கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு தளவாடங்கள் விற்பனை, கூட்டு போர் பயிற்சிகள், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் வழியாக டிரம்ப் நிர்வாகம் ஆதரவு அளித்து வருகிறது.

ஒரு அரசாக நாங்கள் இமயமலையின் நிலைமையை (இந்தியா, சீனா எல்லை மோதல் நிலைமையை) உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புரிந்துகொள்கிறோம்.

இந்த நிலைமை (இந்தியா, சீனா எல்லை மோதல்) மேலும் அதிகரிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிபடுத்த விரும்புகிறோம்.

தென் கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் ஈடுபாட்டை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது வளர்ச்சி முதலீடுகளை குறைக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பை குறைக்கிறது. ஆகவே தென் கிழக்கு ஆசியாவில் அதிகமான இந்திய பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

தென்கிழக்கு ஆசியாவில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது வெறுமனே சீனக்கடல் பற்றி அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story