அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் - ஜோ பைடன் வாக்குறுதி


அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் - ஜோ பைடன் வாக்குறுதி
x
தினத்தந்தி 24 Oct 2020 10:30 PM GMT (Updated: 24 Oct 2020 10:30 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 83 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வருகிற 3-ந்தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் கொரோனா வைரஸ் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே ஜனநாயகத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் கொரோனா வைரசை கையாளும் விதத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வருகிறார்.

அதே சமயம் ஜனாதிபதி டிரம்ப் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அதன் மூலம் மக்களின் வாக்குகளை அள்ள தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடக்க இருக்கும் தேர்தலில் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவேன் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார். தனது சொந்த மாகாணமான டெலாவேரில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இதனை அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அமெரிக்க மக்கள் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொண்டதாக ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். ஆனால் உண்மையில் நாங்கள் கொரோனா வைரசால் மரணிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். இது ஒரு இருண்ட குளிர்காலம்.

இந்த கொடிய வைரசால் அமெரிக்கா ஏற்கனவே 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளது. இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய வரலாற்றில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ். அது குறைந்து வருவதற்கான அறிகுறிகளை காட்டவில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஆனால் டிரம்ப் ‘அதிகமில்லை, அதிகமில்லை’ என கூறி வருகிறார்.

கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டம் டிரம்பிடம் இல்லை. அவர் மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதி. அவரது நிர்வாக தோல்வியால் நாம் கைதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் வேறு பாதையை தேர்வு செய்யலாம். நாம் ஒன்றிணைந்து உறுதியுடன் அதை எதிர்ப்போம். என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யுங்கள். அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வழி செய்வேன்.

நீங்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும். அனைத்து மாகாணங்களிலும் மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஆளுநர்களுக்கு உத்தரவிடுவேன். தற்போது ஒரு வாரத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளை ஒரே நாளில் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன். நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். இப்போது நாம் செல்லும் விகிதத்தை விட மிக வேகமாக மறுபுறம் வெளியே வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story