ஆப்கான் படைகள் தாக்குதல்- அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலி


ஆப்கான் படைகள் தாக்குதல்-  அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலி
x
தினத்தந்தி 25 Oct 2020 3:08 AM GMT (Updated: 25 Oct 2020 3:08 AM GMT)

ஆப்கானிஸ்தான் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலியானார்.

காபூல்,

ஆப்கான் சிறப்புப் படைப்பிரிவு நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவராக அறியப்படும் அபு முஷின் அல் மஸ்ரி கொல்லப்பட்டார். அமெரிக்காவில் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் உயிரிழந்ததை ஆப்கானிஸ்தானின் உளவு அமைப்பும் உறுதி செய்தது. 

அல்கொய்தா அமைப்பின் 2-வது கட்ட தலைவரான அபு முஷின் அல் மஸ்ரி காஸ்னி மாகாணத்தின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவிக்கவில்லை. 

ஹுசம் ஏபிடி அல் ராஃப் என்றும் அழைக்கப்படும் அல் மஸ்ரி, அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பால் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவராகக் கடந்த 2018- ஆம் ஆண்டு பட்டியலில் இணைக்கப்பட்டார். அமெரிக்கர்களைக் கொல்ல பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக இவர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலீபான்களுக்கும் அரசுக்கும் இடையே கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா  அமைப்பின் மூத்த தலைவர் அரசு படையினரால் கொல்லப்பட்டுள்ளார். 

Next Story