இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு


இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை;  சீனா கொந்தளிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 4:56 AM GMT (Updated: 28 Oct 2020 4:56 AM GMT)

இந்திய மக்கள் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா அவர்களுடன் நிற்கும் என சீனாவை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி நேற்று பேசியிருந்தார்.

புதுடெல்லி,

உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே  கடந்த 2018- ஆம் ஆண்டு முதல்,  இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் அமெரிக்கா- இந்தியா இடையேயான மூன்றாவது ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தைக்காக நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ராணுவ மந்திரி  மார்க் எஸ்பர்,  மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு  அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,, “இந்திய மக்கள் தங்கள் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா அவர்களுடன் நிற்கும். சீன கம்யூனிஸ்டு கட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாள்வதற்கான உறவுகளை நாங்கள் பலப்படுத்துகிறோம்” என்று கூறினார்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடன் கடந்த ஜூன் மாதம் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் உள்பட உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை கவுரவிப்பதற்கான போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டதாகவும் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

சீனா கொந்தளிப்பு

அமெரிக்காவின் இந்த கருத்து சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சீன தூதரகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-  இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சினை இரு தரப்பு விவகாரம். இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடும் பேச்சுக்கே இடம் இல்லை. தங்கள் வேறுபாடுகளை சீனாவும் இந்தியாவும் தீர்த்துக்கொள்ளும். சீனா குறித்து தவறான தகவல்களை பரப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story