பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கிய ஈரான்


பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கிய ஈரான்
x
தினத்தந்தி 28 Oct 2020 9:13 PM GMT (Updated: 28 Oct 2020 9:13 PM GMT)

பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன், 

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. 

இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. 

இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உலை அமையும் இடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது. இதையடுத்து அணு உலை கட்டும் பணிகள் கைவிடப்பட்டது. 

இந்தநிலையில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாதன்ஸ் நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இதுகுறித்து ஈரான் தரப்பில் உடனடியாக என்ற கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Next Story