துருக்கி நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வடைந்து உள்ளது.
அங்காரா,
துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.
இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என்றும் 885 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
துருக்கி தவிர அருகேயுள்ள சமோஸ் உள்ளிட்ட கிரேக்க தீவு பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்து உள்ளனர். இந்நிலநடுக்கம் 6.9 ஆக ரிக்டரில் பதிவானது என கிரேக்க நிலநடுக்கவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story