காபூல் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்-19 பேர் பலி, 22 பேர் காயம் எனத்தகவல்


காபூல் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்-19 பேர் பலி, 22 பேர் காயம் எனத்தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2020 1:11 PM GMT (Updated: 2 Nov 2020 1:51 PM GMT)

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழகத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. சில மணி நேரங்கள் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்தது. 

இந்த தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் அதில் ஒருவன் வெடிகுண்டுகளை உடலில் கட்டியபடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும் ஏனைய இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  19 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று காபூல் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.  எனினும், ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை கல்வி நிலையங்களில் தாக்குதல் நடத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.

Next Story