கொரோனா தொற்று; இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மருத்துவர் கொரோனா தொற்றால் தனது 46 வயதில் உயிரிழந்து உள்ளார்.
டெர்பை,
இங்கிலாந்து நாட்டின் டெர்பை பல்கலைக்கழக மருத்துவமனைகளின் ராயல் டெர்பை மருத்துவமனையில் அனஸ்தீசியா பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (வயது 46).
இந்திய வம்சாவளியை சேர்ந்த அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் லெய்செஸ்டரில் உள்ள கிளென்பீல்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
இதுபற்றி ராயல் டெர்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், வருகிற திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அவரது நினைவாக மருத்துவமனையின் நுழைவு வாயிலில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்து உள்ளது. அவர் தனது பணியில் அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டவர் என்றும் தெரிவித்து உள்ளது.
அவர் பணி தவிர்த்து, குடும்பத்தில் நல்ல மனிதராகவும் இருந்தவர். உண்மையாக செயல்பட கூடியவர். அவரது மறைவுக்காக இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினரின் சோக நினைவுகளில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என அனஸ்தீசியா பிரிவு கிளினிக்கல் இயக்குனர் மருத்துவர் ஜான் வில்லியம்ஸ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story