ஈராக், ஆப்கானிஸ்தானில் படைகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு - தலிபான் வரவேற்பு


ஈராக், ஆப்கானிஸ்தானில் படைகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு - தலிபான் வரவேற்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 4:31 PM GMT (Updated: 18 Nov 2020 4:31 PM GMT)

ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக பெண்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு தலிபான் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

காபுல்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளில் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 4,500 முதல் 2,500 ராணுவ வீரர்களை வாபஸ் வாங்கவும், ஈரானில் இருந்து 2500 ராணுவ வீரர்களை ஜனவரி 15ம் தேதிக்குள் படைகளை வாபஸ் வாங்கி மீண்டும் அமெரிக்கா கொண்டு வரவும் டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பென்டகனின் புதிய பாதுகாப்பு செயலாளராக கிறிஸ்டோபர் மில்லர் கொண்டு வரப்பட்ட பின் இந்த அதிரடி மாற்றங்கள் நடக்கிறது. டிரம்ப் எடுக்கும் தவறான முடிவு இது என்று பென்டகனின் முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் படைகளை வாபஸ் பெறுவது குறித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு தலிபான் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காகவும், இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும் இது ஒரு நல்ல நடவடிக்கையாக அமையும் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

Next Story