ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு?


ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு?
x
தினத்தந்தி 18 Nov 2020 9:32 PM GMT (Updated: 18 Nov 2020 9:42 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் அருண் மஜூம்தார் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் விவேக் மூர்த்தி தற்போது ஜோ பைடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் ஜோ பைடனால் சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் 2009-ல் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டவருமான மஜூம்தார், எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் டாக்டர் விவேக் மூர்த்தி, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராக விளங்கியுள்ளார். அதேபோல் மஜூம்தார் ஜோ பைடனுக்கு எரிசக்தி தொடர்பான விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story