இமானுவேல் மேக்ரான் குறித்து பாக். மந்திரி விமர்சனம்: பிரான்ஸ் கடும் எதிர்ப்பு


இமானுவேல் மேக்ரான் குறித்து பாக். மந்திரி விமர்சனம்: பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 10:40 PM GMT (Updated: 22 Nov 2020 10:40 PM GMT)

இமானுவேல் மேக்ரானை நாஜிக்களோடு ஒப்பிட்டு பேசிய கருத்தை உடனடியாக பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

பாரிஸ்,

பாகிஸ்தானில் மனித உரிமைகள் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஷிரீன் மசாரி. இவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதாவது, ஜெர்மனியின் நாஜிக்கள் யூதர்களை எவ்வாறு நடத்தினார்களோ அது போல இமானுவேல் மேக்ரன் முஸ்லீம்களை நடத்துவதாக சாடியிருந்தார். 

பாகிஸ்தான் மந்திரியின் கருத்துக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:  பாகிஸ்தானின் மந்திரி வெளியிட்ட கருத்துக்கள் வெறுப்புணர்வை கொண்டது. அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியது.  

வெறுப்பு மற்றும் வன்முறை சித்தாந்தங்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்து உள்ளது. பாகிஸ்தானின் கருத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தான் தனது தவறை திருத்திக்கொண்டு  பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகம்மது நபிகள் பற்றிய கேலிச்சித்திரம் விவகாரத்தில் பிரான்ஸ் நடந்து கொண்ட விதத்தால், பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

Next Story