சார்லஸ்- டயானா விவகாரத்திற்கு காரணமாக அமைந்த பேட்டி - விசாரணை நடத்த உத்தரவு


சார்லஸ்- டயானா விவகாரத்திற்கு காரணமாக அமைந்த பேட்டி - விசாரணை நடத்த உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2020 9:01 AM GMT (Updated: 24 Nov 2020 9:01 AM GMT)

இங்கிலாந்து இளவரசி டயானாவிடம் எடுக்கப்பட்ட பேட்டி குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதற்கு, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

லண்டன்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், இளவரசர் சார்லஸ் (72). இவர், தன் முதல் மனைவி இளவரசி டயானாவிடம் இருந்து, 1996-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்த விவாகரத்திற்கு, அதே ஆண்டு, டயானா அளித்தபேட்டி ஒன்று தான் காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது.

பி.பி.சி., தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பனோரமா' என்ற நிகழ்ச்சிக்கு, டயானா அளித்த அந்த பேட்டி, அரச குடும்பத்தை அதிரவைத்தது.

பத்திரிகையாளர் மார்ட்டின் பாஷிர் எடுத்த அந்த பேட்டியை, இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர், நேரலையில் பார்த்தனர்.அந்த பேட்டியில், இளவரசர் சார்லசுக்கும், அவரது தற்போதைய மனைவியான கமிலா பார்க்கருக்கும் இடையிலான உறவு குறித்து, டயானா வெளிப்படையாக கூறி இருந்தார்.

பத்திரிகையாளர் பாஷிர், போலி ஆவணங்களை காண்பித்து, டயானாவுக்கு அழுத்தம் கொடுத்து, அந்த பேட்டியை எடுத்ததாக, டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். அதற்கான ஆதாரங்கள், பி.பி.சி. நிறுவனத்திற்கு கிடைத்தன. இதையடுத்து, விசாரணைக்கு, பி.பி.சி.நிறுவனம் உத்தரவிட்டது.

அதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் டைசன் தலைமையிலான குழு, அமைக்கப்பட்டது. இந்நிலையில், தங்கள் தாயின் சர்ச்சைக்குரிய பேட்டி தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதற்கு, இங்கிலாந்து  இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story