பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை: இம்ரான் கான் ஒப்புதல் எனத்தகவல்
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை அளிக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்லமாபாத்,
பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்க இம்ரான் கான் அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக குற்றங்களை தடுக்கும் நோக்கில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க இம்ரான் கான் அரசு முடிவு செய்தது. இதற்கான திருத்தப்பட்ட சட்ட வரைவு, பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு பொது இடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற சில யோசனைகளை மந்திரிகள் முன்வைத்தனர். ஆனால், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க இம்ரான் கான் ஒப்புதல் அளித்ததாக பாகிஸ்தானின் ஜியோ (Geo) தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த சட்ட வரைவுக்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, அமல்படுத்தப்படும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சட்ட வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story