இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு


இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
x
தினத்தந்தி 28 Nov 2020 12:10 AM GMT (Updated: 28 Nov 2020 12:10 AM GMT)

இலங்கை பிரதமர் ராஜபக்சேவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். இலங்கை, மாலத்தீவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

கொழும்பு,

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய பெருங்கடல் நாடுகளான இந்தியா, இலங்கை, மாலத்தீவு இடையே 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை, 2014-ம் ஆண்டு டெல்லியில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தநிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கொழும்பு சென்றார். அவரை இலங்கை ராணுவ தளபதி சில்வா ஷாவேந்திரா வரவேற்றார்.

பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், இந்திய குழுவுக்கு அஜித் தோவலும், மாலத்தீவு குழுவுக்கு அதன் ராணுவ மந்திரி மரிய தீதியும் தலைமை தாங்கினர். வங்காளதேசம், மொரீஷியஸ், சிஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுச்சூழல், தகவல் பகிர்வு மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் ஆகியவற்றை தடுப்பது தொடர்பாக கூட்டாக நடவடிக்கை எடுப்பது பற்றி இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இன்றும் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதற்கிடையே, நேற்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை அஜித் தோவல் சந்தித்தார். பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம், மோடி-ராஜபக்சே இடையே காணொலி காட்சியில் நடந்த உச்சி மாநாட்டின் வெற்றி குறித்து நினைவு கூர்ந்தார்.

பின்னர், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னேவையும் அஜித் தோவல் சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் முடிவு செய்தனர்.

Next Story