அடுத்த ஆண்டின் முதல் மாதங்கள் வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும் - ஜெர்மனி பொருளாதாரத்துறை மந்திரி


அடுத்த ஆண்டின் முதல் மாதங்கள் வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும் - ஜெர்மனி பொருளாதாரத்துறை மந்திரி
x
தினத்தந்தி 28 Nov 2020 7:35 PM GMT (Updated: 28 Nov 2020 7:35 PM GMT)

ஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் மாதங்கள் வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அந்நாட்டு மற்றும் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி துறை மந்திரி பீட்டர் ஆல்ட்மேயர் தெரிவித்துள்ளார்.

பெர்லின்,

கொரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அங்கு வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக இருப்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிரான இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி துறை மந்திரி பீட்டர் ஆல்ட்மேயர் கூறுகையில் “ஜெர்மனியில் 1 லட்சம் மக்களில் 50 பேருக்கு வைரஸ் தொற்று என்கிற விகிதம் இருக்கும் வரை நம்மால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. எனவே துரதிருஷ்டவசமாக கட்டுப்பாடுகளை ரத்து செய்ய முடியாது. 2021-ம் ஆண்டின் முதல் சில மாதங்களில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்” என்றார்.

Next Story