குரோசிய பிரதமருக்கு 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி


குரோசிய பிரதமருக்கு 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 Dec 2020 3:04 AM GMT (Updated: 1 Dec 2020 3:04 AM GMT)

குரோசிய நாட்டு பிரதமருக்கு நடந்த 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெல்கிரேடு,

குரோசியாவின் பிரதமராக ஆன்டிரெஜ் பிளென்கோவிக் இருந்து வருகிறார்.  உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு அந்நாட்டில் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.  இதேபோன்று குரோசிய நாட்டில் 1.2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், லேசான காய்ச்சலால் அவதிப்பட்ட பிரதமர் பிளென்கோவிக்கின் மனைவி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக பிரதமரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  இதன் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால், பிரதமர் பிளென்கோ 10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார்.  இந்நிலையில், பிளென்கோவுக்கு நடந்த 2வது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி குரோசிய அமைச்சரவை சார்பில் டுவிட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், தொற்று நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் ஆன்டிரெஜ் பிளென்கோவிற்கு 2வது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனினும், அவர் நன்றாக இருக்கிறார்.  வீட்டில் இருந்தபடி தொடர்ந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார்.  மருத்துவர்கள் மற்றும் நோய் தொற்று நிபுணர்கள் அளித்த அறிவுரைகளை பின்பற்றி வருகிறார் என தெரிவித்து உள்ளது.

Next Story