சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது


சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது
x
தினத்தந்தி 11 Dec 2020 2:53 AM GMT (Updated: 11 Dec 2020 2:53 AM GMT)

அமீரகத்தில் சீனாவின் சினோபார்ம் கொரோனா மருந்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அந்த நாட்டில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அபுதாபிக்கு நேற்று 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

அபுதாபி, 

அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சீனாவில் இருந்து அபுதாபிக்கு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வர அபுதாபியில் எதிகாத் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-300 இ.ஆர். என்ற சரக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானத்தில் வெப்பநிலையை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட வெப்பநிலையில் சினோபார்ம் மருந்தை பராமரித்தால்தான் அதன் தன்மை மாறுபடாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சீனாவின் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொத்தம் 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டு அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி துறைமுகத்தில் உள்ள கிசாட் குளிரூட்டப்பட்ட சேமிப்பு மையத்தில் அந்த மருந்துகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட உள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்தை அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு ஹோப் கன்சோர்டியம் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அந்த குளிரூட்டும் சேமிப்பு மையத்தில் பராமரிக்கப்படும் மருந்துகள் தேவைக்கேற்ப நாடு முழுவதும் வினியோகம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 2 கட்டமாக போடப்படும் தடுப்பூசி மருந்துகள் சீனாவில் இருந்து அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு உதவியாக இருந்த தனியார்துறை நிறுவனங்களுக்கு பாராட்டையும் நன்றியும் தெரிவிப்பதாக அபுதாபி சுகாதாரத்துறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமத் கூறினார்.

Next Story