இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு


இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2021 1:51 AM GMT (Updated: 5 Jan 2021 1:51 AM GMT)

இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், இங்கிலாந்து  தடுமாறியது. ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது.  இதையடுத்து,  இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். 

தொலைக்காட்சியில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்தார். ஆறு வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனத் தெரிகிறது. புதன் கிழமை முதல் பள்ளிகள்  மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்காட்லாந்தும் இதேபோன்ற  ஊரடங்கை அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து மக்கள் பத்திரமாக தங்கள் குடியிருப்பிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், நாட்டில் அமலுக்கு வரும் இந்த ஊரடங்கு புதிய வகை கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்பட்டிருந்ததைப் போல மிக கடுமையானதாக இருக்கும் என்று தெரிகிறது. 


Next Story