நியூசிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று: 3 நாட்களில் 31 பேருக்கு பாதிப்பு


நியூசிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று:  3 நாட்களில் 31 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 9:06 AM GMT (Updated: 10 Jan 2021 9:06 AM GMT)

நியூசிலாந்தில் கடந்த 3 நாட்களில் 31 பேருக்கு உருமாறிய கொரோனா வைரசின் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.

வெல்லிங்டன்,

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா தொற்றுக்கு விதிவிலக்காக சில நாடுகள் தப்பி வந்தன.  சில நாடுகள் கொரோனா பரவல் தொடங்கியதும், கடுமையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவலை கட்டுப்படுத்தின.

இவற்றில் நியூசிலாந்தும் ஒன்று.  அந்த வகையில் அந்நாட்டு பெண் பிரதமரான ஆர்டெர்னுக்கு பாராட்டுகள் குவிந்தன.  இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் கடந்த டிசம்பர் இறுதியில் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இது மிக எளிதில் பரவும் தன்மை கொண்டுள்ளது என தெரிய வந்தது.  இதனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவும் இங்கிலாந்துடனான விமான சேவையை துண்டித்தன.

இந்த சூழலில், நியூசிலாந்து நாட்டில் கடந்த 3 நாட்களில் 31 பேருக்கு உருமாறிய கொரோனா வைரசின் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

நியூசிலாந்து எல்லையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட 20பி/501ஒய்.வி1 வகையை சேர்ந்த தொற்றானது 19 பேரிடமும் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 501ஒய்.வி2 வகையை சேர்ந்த தொற்றானது ஒருவரிடமும் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது.

சர்வதேச நாடுகளில் புதிய கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கையானது, எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும் என்ற தேவையை மீண்டும் வலியுறுத்தி உள்ளது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அந்நாட்டில் மொத்தம் 1,863 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  எனினும், பொது மக்கள் ஒன்று கூடுவதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல், எச்சரிக்கை அளவு 1 ஆகவே நீடித்து வருகிறது.

Next Story