தைவானுடனான தூதரக தொடர்புகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்; அமெரிக்கா அறிவிப்பு


தைவானுடனான தூதரக தொடர்புகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்; அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 10:16 PM GMT (Updated: 10 Jan 2021 10:16 PM GMT)

அமெரிக்கா இடையே இணக்கமான சூழல் இருந்த சமயத்தில் தைவான் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் இடையிலான தகவல் தொடர்புக்கு அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

வாஷிங்டன்,

தீவுநாடான தைவான் தங்களது மாகாணங்களில் ஒன்று என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தைவானை தனி நாடாக கருதி ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. அதேசமயம் பல ஆண்டுகளுக்கு முன்பு சீனா- அமெரிக்கா இடையே இணக்கமான சூழல் இருந்த சமயத்தில் தைவான் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் இடையிலான தகவல் தொடர்புக்கு அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 

இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அமெரிக்க தூதர்கள் மற்றும்‌ தைவான் தூதர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பை கட்டுப்படுத்தும் சிக்கலான கட்டுப்பாடுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னர் அறிமுகப்படுத்தியது. 

அந்த சுய கட்டுப்பாடுகள் அனைத்தையும் நான் இன்று நீக்குகிறேன். அமெரிக்கா தைவான் உறவு நமது நிரந்தர அதிகாரத்துவத்தின் சுய கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தைவான் ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் நம்பகமான அமெரிக்காவின் கூட்டாளி ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த புதிய அறிவிப்பு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடையும் என்றும் கருதப்படுகிறது.


Next Story