அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு உறுதி


அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 12 Jan 2021 3:34 AM GMT (Updated: 12 Jan 2021 3:34 AM GMT)

அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா,

அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன.  இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் செயல்பட்டு வரும் விலங்கு பூங்காக்களை அரசு மூடியது.  பொதுமக்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவி விட கூடாது மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 6ந்தேதி சான் டீகோ நகரில் உள்ள விலங்குகளுக்கான சபாரி பூங்கா பொதுமக்களின் வருகைக்கு தடை விதித்தது.  இந்த பூங்காக்களில் கொரில்லாக்கள் வளர்க்கப்படுகின்றன.

இங்குள்ள 2 கொரில்லாக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருமல் ஏற்பட்டு உள்ளது.  இதனால் பூங்கா அதிகாரிகள் அவற்றின் மலக்கழிவு பொருட்களை பரிசோதனை மேற்கொண்டனர்.  இதில் கடந்த 8ந்தேதி வெளிவந்த முடிவில், அவற்றுக்கு வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.  இதனை அதிகாரிகளும் நேற்று உறுதி செய்துள்ளனர்.

இந்த பரிசோதனை முடிவுகள் கொரில்லா குழுக்களுக்கும் பரவி இருக்க கூடும் என்பது மறுப்பதற்கில்லை.  இதுபற்றி பூங்கா செயல் இயக்குனர் லிசா பீட்டர்சன் கூறும்பொழுது, இருமல் தவிர்த்து கொரில்லாக்கள் நன்றாகவே உள்ளன.  வேறு பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.  கொரில்லா குழுவானது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

அவற்றுக்கு தனியாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  அவை மீண்டும் நலமுடன் திரும்பும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.  பூங்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

எனினும், அறிகுறி தென்படாத பூங்கா ஊழியரிடம் இருந்து கொரில்லாக்களுக்கு இந்த பாதிப்பு பரவி இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

Next Story