வெள்ளை மாளிகையில் தனது அலுவல்களை தொடங்கிய ஜோ பைடன்


வெள்ளை மாளிகையில் தனது அலுவல்களை தொடங்கிய ஜோ பைடன்
x
தினத்தந்தி 20 Jan 2021 8:51 PM GMT (Updated: 20 Jan 2021 8:51 PM GMT)

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன் ஒவல் அலுவலகத்தில் தனது அலுவல்களை தொடங்கினார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் இன்று நடந்த வண்ணமயமான விழாவில் பதவியேற்றனர்

இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். ராணுவத்தால் இசை முழுங்க ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளைமாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுகள் அமெரிக்க டிவி சேனல்களிலும், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் தனது அலுவல்களை ஜோ பைடன் தொடங்கினார். 



 



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தனது பதவிக் காலத்தின் முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

வெள்ளைமாளிகையில் ஜனாதிபதியின் அறையிலிருந்து, ஜோ பைடன் தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, துணை அமைச்சரவை அளவிலான பாத்திரங்களுக்கு முறைப்படுத்தினார். பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பைடன் கையெழுத்திட்டார். காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உட்பட பல நிர்வாக நடவடிக்கைகளில் அவர் பின்னர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், “நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, ஜனாதிபதி அலுவலகமான ஓவல் அலுவலகம் செல்கிறேன். அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். 

Next Story