லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவதை தடுக்க விஜய் மல்லையா மேற்கொள்ளும் ரகசிய முயற்சி


லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவதை தடுக்க விஜய் மல்லையா மேற்கொள்ளும் ரகசிய முயற்சி
x
தினத்தந்தி 23 Jan 2021 10:09 AM GMT (Updated: 23 Jan 2021 10:09 AM GMT)

லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவதை தடுக்க விஜய் மல்லையா புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

லண்டன்

பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

அவர் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தை சேர்ந்த வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் 2018 டிசம்பரில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து விஜய் மல்லையா நாடு கடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.ஆனால் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து அரசு கூறுகையில், சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவை முடிந்த பிறகே விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியும். ஆனால் அதற்கு எவ்வளவு காலமாகும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்தது.

இந்த நிலையில் நாடு கடத்தலில் இருந்து தப்பிக்க விஜய் மல்லையா புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் லண்டனில் தனக்கு தஞ்சம் அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.இந்த தகவலை விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் கூறுகையில், விஜய் மல்லையா தான் லண்டனில் தங்க புதிய நடவடிக்கையை இங்கிலாந்தின் உள்துறை மந்திரி ப்ரீத்தி பட்டேலிடம் விண்ணப்பித்து உள்ளார் என்றார்.

தஞ்சம் கோரி விண்ணப்பித்ததை விஜய் மல்லையா ரகசியமாக செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

Next Story