தைவான் மீதான ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதியை அச்சுறுத்துகிறது; சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை


தைவான் மீதான ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதியை அச்சுறுத்துகிறது; சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை
x
தினத்தந்தி 24 Jan 2021 10:31 PM GMT (Updated: 24 Jan 2021 10:31 PM GMT)

தைவான் மீதான சீன ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தீவு நாடான தைவான் உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தைவானை அச்சுறுத்தும் விதமாக சீனா சமீபகாலமாக தனது தென்கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ படைகளை குவித்து வருகிறது.

இந்த நிலையில் தைவான் மீதான சீன ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘சீன அரசு தைவான் உட்பட அதன் அண்டை நாடுகளை மிரட்ட முயற்சிக்கும் முறையை அமெரிக்கா கவலையுடன் குறிப்பிடுகிறது. சீனா, தைவான் மீதான ராணுவ, தூதரக மற்றும் பொருளாதார அழுத்தத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தைவான் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’’ என்றார். 

மேலும் அவர் ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களது பகிரப்பட்ட செழிப்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை முன்னேற்றுவதற்காக எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் துணை நிற்போம். அதில் ஜனநாயக தைவான் உடனான எங்கள் உறவுகளை ஆழப்படுத்துவதும் அடங்கும்" எனவும் அவர் கூறினார்.


Next Story