பதவிக்காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்கள் பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்


பதவிக்காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்கள் பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
x
தினத்தந்தி 25 Jan 2021 2:09 AM GMT (Updated: 25 Jan 2021 2:09 AM GMT)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது பதவிக்காலத்தில், 30,573 பொய்களை பொதுவெளியில் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க ஜானாதிபதியாக  இருந்த டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்தார்.தற்போது ஜனாதிபதி  பதவியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பதவிக்காலத்தில் ஏராளமான முறை பொய்களை பேசி உள்ளது  தெரியவந்துள்ளது. அவர் தெரிவித்த பொய்களின் எண்ணிக்கை 30573.

வாஷிங்டன் போஸ்ட் ஃபேக்ட் செக்கர் குழு டொனால்ட் டிம்பின் பொய்யான அல்லது தவறான கூற்றுக்களை பட்டியலிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு :-

டிரம்ப்  ஜனாதிபதி பதவியேற்ற முதல் 100 நாட்களில் 492 பொய்களை  பதிவு செய்துள்ளார். டிரம்ப் தனது பதவிக் காலத்தின் முடிவில், தனது ஜனாதிபதி காலத்தில் 30,573 பொய்களை கூறி உள்ளார். சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 21 பொய்கள்

டைம் இதழின் அட்டைப்படத்தில் அதிக முறை தோன்றி சாதனை படைத்துள்ளதாக கூறியதிலிருந்து, டிரம்பின் பொய் பிரசாரம் தொடங்கியுள்ளது.ஜனாதிபதி பதவியிலிருந்த முதல் ஆண்டில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 6 தவறான தகவல்களை தெரிவித்த அவர்,அடுத்து  அந்த எண்ணிக்கையை இரண்டாவது ஆண்டில் 16,  மூன்றாவது ஆண்டில் 22 மற்றும் இறுதி ஆண்டில் 39 என தொடர்ந்து அதிகப்படுத்தி உள்ளார்.

அவர் தெரிவித்த தவறான தகவல்களில் பெரும்பாலானவை, நீக்கம் செய்யப்பட்ட அவரது டுவிட்டர் கணக்கு வாயிலாகவே தெரிவித்துள்ளார்.  புதிய வரி திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அளவில் வரிகளை குறைத்த அதிபர் தான் என, பொய்யான பெருமைகளை அவர் பேசியுள்ளார்.

கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில்,  அமெரிக்காவின் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு தான் தான் காரணம் என டிரம்ப் ஆறாயிரத்திற்கும் அதிகமான முறை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், அதனை தான் வென்று விட்டதாகவும், அதிசயம் நிகழ்ந்தது போல் அது காணாமல் போய்விடும் என்றும் கூறினார். இதேபோல, மோசமான சுகாதார உட்கட்டமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி  ஒபாமா தான் காரணம் என கூறியது, டிரம்பின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

குறிப்பாக தேர்தல் நெருங்கிய கடைசி 5 மாதங்களில் டிரம்ப் தெரிவித்த, பொய்யான தகவல்களின் எண்ணிக்கை மட்டும் பத்தாயிரத்தை கடந்து உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  தேர்தல் வெற்றி திருடப்பட்டு உள்ளது இது ஒரு மோசமான தேர்தல் என பல பொய்களை, டிரம்ப் கட்டவிழ்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறிய தவறான தகவல்களில் பல்வேறு தகவல்கள், அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story