8 மாதங்களில் முதல் முறை: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு


8 மாதங்களில் முதல் முறை: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு
x
தினத்தந்தி 26 Jan 2021 12:23 AM GMT (Updated: 26 Jan 2021 12:23 AM GMT)

இந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு அடைந்துள்ளது.

இந்தியா வெற்றி
உலகமெங்கும் இன்றளவும் ருத்ர தாண்டவமாடி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தாலும், கொரோனா பரவலை கணிசமாக கட்டுப்படுத்தி உள்ளது. வைரஸ் தொற்று மீட்பில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இறப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இந்தியாவில் 131 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர். கடந்த 8 மாதங்களில் இதுவே மிக குறைந்த கொரோனா உயிர்ப்பலி என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

பலியான 131 பேரில், 45 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். கேரளாவில் 20 பேரும், டெல்லியில் 9 பேரும், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 8 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. அங்கு 50 ஆயிரத்து 785 பேர் பலியாகி உள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்கிறது. மூன்றாவது இடத்தில் கர்நாடகம் (12 ஆயிரத்து 197) நீடிக்கிறது.

புதிதாக 13 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 13 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் 5 லட்சத்து 70 ஆயிரத்து 246 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இந்தளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நாட்டின் மொத்த பாதிப்பு என்பது 1 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.இதே போன்று, இதுவரையில் இந்தியாவில் 19 கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 117 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ளது.

13 ஆயிரம் பேர் மீட்பு
கொரோனாவின் ஒரு நாள் பாதிப்பை விட மீட்பு சற்றே அதிகரித்துள்ளது. 13 ஆயிரத்து 203 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நாடு முழுவதும் 13 ஆயிரத்து 298 பேர் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டு வீடுகளுக்கு திரும்பினர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 5,173 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 1,743 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 30 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா மீட்பு விகிதம் 96.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகின் மிக உயர்ந்த மீட்பு விகிதம் இதுவாகும்.

சிகிச்சை பெறுவோர்
நாட்டில் தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வருவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.73 சதவீதம்தான்.

தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்குள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.கேரள மாநிலத்தில்தான் அதிக அளவாக 73 ஆயிரத்து 121 பேர் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் மராட்டியத்தில் 46 ஆயிரத்து 57 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, உயிர்ப்பலியும் குறைந்து வருகிறது. மீட்பு விகிதம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது நிம்மதி அளிப்பதாகும்.

Next Story