தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அமெரிக்கா கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது


தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அமெரிக்கா கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது
x
தினத்தந்தி 27 Jan 2021 9:30 PM GMT (Updated: 27 Jan 2021 9:30 PM GMT)

தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அமெரிக்கா கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவும் அதே வேகத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும், மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும் அங்கு பயன்பாட்டில் உள்ளது.‌ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்னும் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய தடுப்பூசி வழங்கல் மற்றும் உற்பத்தி திட்டங்களை மறு ஆய்வு செய்த பின்னர் அனைத்து மாகாணங்களுக்கும் வாராந்திர தடுப்பூசி வினியோகத்தை 86 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களிடம் இருந்து தலா 10 கோடி வீதம் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்குவது விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்று கூறிய ஜோ பைடன் இந்த ஆண்டு கோடை கால இறுதிக்குள் 30 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.


Next Story