மியான்மர்: ராணுவத்தின் அழைப்பை நிராகரித்த அரசியல் கட்சிகள்


மியான்மர்: ராணுவத்தின் அழைப்பை நிராகரித்த அரசியல் கட்சிகள்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:21 PM GMT (Updated: 9 Feb 2021 11:21 PM GMT)

மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த 1-ந் தேதி கூட இருந்த நிலையில், அதிரடியாக ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

யாங்கூன்,

மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த 1-ந் தேதி கூட இருந்த நிலையில், அதிரடியாக ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறிய ராணுவம், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தை கைப்பற்றியது. ஆனால் அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுத்து, கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்துகின்றனர். 

ராணுவ புரட்சி பற்றி இதுவரை மவுனம் காத்து வந்த தளபதி மின் ஆங் ஹலேங், நேற்று முன்தினம் இரவு தனது மவுனத்தை கலைத்து டி.வி. மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தேர்தலில் நடைபெற்ற மோசடியால் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை நியாயப்படுத்தினார். தேர்தல் மோசடிகளை தேர்தல் கமிஷன் விசாரிக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். தேர்தல் கமிஷனை மாற்றியமைத்து, அந்த நாட்டில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில், மியான்மரில் கடந்த 8 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 30 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக  மியான்மர் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களுக்கும், பொது இடங்களில் உரை நிகழ்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறினால் 144 தடை உத்தரவை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் மியான்மர் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்களில் 100- க்கும் மேற்பட்டோரை மியான்மர் போலீஸ் கைது செய்துள்ளது. இந்த சூழலில், ராணுவம் அமைத்துள்ள அமைதி குழுவுடன் ஆலோசனை நடத்துமாறு ராணுவம் தரப்பில் மியான்மரில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ராணுவத்தின் அழைப்பை மியான்மர் கட்சிகள் நிரகரித்துள்ளன. 

Next Story