மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏன்? உண்மையான நோக்கம் என்ன? ராணுவம் விளக்கம்


மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏன்? உண்மையான நோக்கம் என்ன?  ராணுவம்  விளக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2021 5:26 PM GMT (Updated: 16 Feb 2021 5:26 PM GMT)

மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏன்? ராணுவத்தின் உண்மையான நோக்கம் என்ன? என்பது குறித்து பிரிகேடியர் ஜெனரல் விளக்கம் அளித்து உள்ளார்.

யங்கூன்

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 10 நாட்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் தலைநகர் நேபிடாவ், யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. இப்படி ராணுவம் தனது பிடியை இறுக்கி வந்தாலும் அதற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரத்தான் செய்கிறது.

இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு  20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மியான்மரில் ஆளும் கட்சித்தலைவர்களை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏன் என்பது குறித்தும், அவர்களின் நோக்கம் குறித்தும் அந்நாட்டு இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல்சாவ் மின் துன்  விளக்கமளித்துள்ளார்.

மியான்மரின் இராணுவத்திற்கு நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இது ஒரு ஆட்சி கவிழ்ப்பு சதி அல்ல.  நவம்பரில் நடந்த தேர்தல் மோசடி இராணுவத்தின் உத்தரவை தொடர்ந்து தீர்க்கப்படவில்லை, அதற்காக அரசாங்க தலைவர்களை கைது செய்து உள்ளது நியாயமானது.

தேர்தலை நடத்துவதும், வென்ற கட்சிக்கு அதிகாரத்தை வழங்குவதும் தான் எங்கள் நோக்கம்.  2008 அரசியலமைப்பு சட்டத்தை நாடு ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது என கூறினார்.

தசாப்தத்திற்கு முன்னர் நடைமுறைக்கு வந்து 2015-ல் திருத்தப்பட்ட இந்த சட்டம், பாராளுமன்றத்தில் சுமார் கால்வாசி இடங்களை இராணுவ அதிகாரிகளுக்கு சேவை செய்வதற்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story