கடத்தப்பட்ட துபாய் இளவரசி என்ன ஆனார்? உயிருடன் இருக்கிறாரா? அமீரகத்திற்கு முற்றும் நெருக்கடி


கடத்தப்பட்ட துபாய் இளவரசி என்ன ஆனார்? உயிருடன் இருக்கிறாரா? அமீரகத்திற்கு முற்றும் நெருக்கடி
x
தினத்தந்தி 17 Feb 2021 5:28 PM GMT (Updated: 17 Feb 2021 5:28 PM GMT)

இங்கிலாந்து, துபாய் இளவரசியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை வலியுறுத்தியுள்ளது.

துபாய்

துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த 30 பிள்ளைகளில் ஒருவர் இளவரசி  லதிபா அல்-மக்தூம்  (35). அவர்  தந்தையின் பிடியிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒரு நாள், லதிபா அல்-மக்தூம் வின் உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த டினா ஜவுஹைனென்  என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்புகிறார்.

எட்டு நாட்களுக்குப் பின், இந்தியப் பெருங்கடலில், படகு ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டேன் என லதிபா நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரம், எதிர்பாராத ஒரு பயங்கரம் நிகழ்கிறது.

படகுகளில் வந்த அமீரக போலீசார் லதிபா  இருந்த படகை சூழ்ந்துகொள்கிறார்கள். கதறக் கதற முரட்டுத்தனமாக கையாளப்படும் இளவரசிக்கு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.

கண் விழிக்கும்போது, துபாயில் ஒரு அறையில் இருக்கிறார் அவர். அங்கிருக்கும் ஒரு காவலாளி லதிவிடம், நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்கிறார்!

இதற்கிடையில் லதிபாவுடன் கைது செய்யப்பட்ட பின்லாந்து நாட்டவரான டினா இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார்.

விடுவிக்கப்பட்டதும், அவர் இளவரசி லதிபாவின் கதையை வெளி உலகுக்கு சொல்கிறார். ஐக்கிய நாடுகள் துபாய் மன்னரை நெருக்குகின்றன. என்ன நடக்கிறது, லதிபாஉயிருடன் இருக்கிறாரா என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட, லதிபாவை சந்திக்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர் ஆணையரான மேரி ராபின்சன்  வருகிறார்.

ஆனால், மேரி ராபின்சனிடம்  லதிபாவுக்கு  மன நல பிரச்சினை என்றும்,லதிபாவிடம் நண்பர் ஒருவர் உன்னைப் பார்க்க வருகிறார், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் பொய் சொல்லி இருவரையும் சந்திக்கவைக்கிறார்கள்.

லதிபா மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்களை மேரி ராபின்சன்  வெளியிடுகிறார்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு லதிபாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது டினாவுக்கு... தான் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது முதல் தனக்கு என்னென்ன நடந்தது என பல விஷயங்களை ஒரு குளியலறையில் மறைந்திருந்துகொண்டு தெரிவிக்கிறார்  லதிபா .பின்னர் ஒருநாள் மீண்டும் லதிபாவிடமிருந்து வரும் அழைப்புகள் நின்றுபோகிறது, ஒருவேளை அவர் மொபைல் பயன்படுத்தும்போது பிடிபட்டு, அவரது மொபைல் பறிக்கப்பட்டிருக்கலாம்! தற்போது, அவர் வெளியிட்ட வீடியோக்களை ஒவ்வொன்றாக உலகின் பார்வைக்கு வைக்கிறார் டினா.
    
தற்போது, அந்த வீடியோக்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, துபாய்  இளவரசியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை வலியுறுத்தியுள்ளது.இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரான டொமினிக் ராப் , இளவரசி லதிபா கடத்தப்பட்டு சூரிய ஒளி கூட கிடைக்காமல் வீடு ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்ட மக்கள், அவர் உயிருடனும், நலமாகவும் இருப்பதை அறிய மக்கள் விரும்புவார்கள் என்றார்.

அத்துடன், லதிபாபிரச்சினையை அமீரகத்துடன் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்ப இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை உற்றுக்கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் லதிபா பிரச்சினை தொடர்பாக அமீரகத்திடம் கேள்வி எழுப்ப உள்ளதாகவும், லதிபா வெளியிட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டபின், விசாரணை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story