பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை


பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 19 Feb 2021 5:53 PM GMT (Updated: 19 Feb 2021 5:53 PM GMT)

பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் இன்று 10-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

படைகள் வாபஸ்
கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக மோதல்போக்கு நிலவி வந்தது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்து போர்ப்பதற்றம் தொடர்ந்தது. அதற்கு மத்தியிலும், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இரு தரப்பும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

அதன்பயனாக இரு தரப்பும் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து10-ந் தேதி முதல் படைகளை வாபஸ் பெறும் பணி தொடங்கியது. இதுகுறித்து 11-ந் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிக்கை அளித்தார்.

இன்று பேச்சுவார்த்தை
இரு தரப்பு படைகளும் பாங்கோங் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து திரும்பப்பெறப்படுவது நிறைவு அடைந்துள்ள சூழலில், இன்று (சனிக்கிழமை) இந்திய, சீன ராணுவ தளபதிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சு வார்த்தை நடக்கிறது.

இந்த பேச்சு வார்த்தையானது, கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதி்யில் மோல்டோ எல்லை புள்ளியில் நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக்கில் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ளும் விவகாரம் இடம் பெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story