சீன சிறையில் சுற்றுலா வழிகாட்டி உயிரிழப்பு - திபெத் சமூக செயல்பாட்டாளர்கள் மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம்


சீன சிறையில் சுற்றுலா வழிகாட்டி உயிரிழப்பு - திபெத் சமூக செயல்பாட்டாளர்கள் மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
x
தினத்தந்தி 20 Feb 2021 1:22 AM GMT (Updated: 20 Feb 2021 1:45 AM GMT)

சீன சிறையில் உயிரிழந்த திபெத் சுற்றுலா வழிகாட்டியின் மரணத்திற்கு நியாயம் வேண்டி திபெத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

லாசா,

திபெத்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான 51 வயது குன்சங்க் ஜின்பா, கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சீனாவின் ரகசியங்கள் மற்றும் உள்ளூர் நிலவரங்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்ததாக குன்சங்க் ஜின்பா மீது சீன அரசு குற்றம் சாட்டி, அவரை சிறையில் அடைத்தது. 

ஆனால் அதன் பிறகு அவர் எந்த சிறையில் வைக்கப்பட்டார், அங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது நடத்தப்பட்ட விசாரணை, தீர்ப்பு குறித்த விவரங்கள் எதுவும் பொது வெளியில் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக திபெத்திய தன்னாட்சி பகுதியில் அமைந்திருக்கும் லாசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி குன்சங்க் ஜின்பா உயிரிழந்தார். 

சீன சிறையில் குன்சங்க் ஜின்பா காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து குன்சங்க் ஜின்பாவின் மரணத்திற்கு நியாயம் வேண்டி திபெத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். மேலும் திபெத்திய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மையம் (டி.சி.எச்.ஆர்.டி) சீனாவில் அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் சீனாவில் சிறைக் கைதிகள் அனுபவிக்கும் சித்ரவதை குறித்து எடுத்துரைப்பதாக ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story