அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை நீக்கும் என ஈரான் நம்பிக்கை


அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை நீக்கும் என ஈரான் நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2021 7:38 PM GMT (Updated: 20 Feb 2021 7:38 PM GMT)

தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விரைவில் அமெரிக்கா நீக்கும் என்று நம்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், ஈரான் அரசு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டால் அணுசக்தி ஒப்பத்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் , “அமெரிக்கா எங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விரைவில் நீக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story