உணவகங்களில் பணிபுரியும் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் 2 வாரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் சார்ஜா மாநகராட்சி அறிவிப்பு


உணவகங்களில் பணிபுரியும் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் 2 வாரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் சார்ஜா மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2021 11:45 AM GMT (Updated: 25 Feb 2021 11:45 AM GMT)

உணவகங்களில் பணிபுரியும் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் 2 வாரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் சார்ஜா மாநகராட்சி அறிவிப்பு.

சார்ஜா,

சார்ஜா மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சார்ஜா பகுதியில் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

சார்ஜா பகுதியில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தடுப்பூசி போடவில்லையெனில் அவர்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். 2 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த பரிசோதனை செய்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இது குறித்து அறிவிப்பு பலகை ஒவ்வொரு நிறுவனத்தின் வெளியிலும் இருக்குமாறு தெரிவிக்கப்பட வேண்டும். அதில் யார், யார் தடுப்பூசி போட்டுள்ளார்கள், யார், யார் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் என்ற விவரம் இடம் பெற வேண்டும்.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட போடப்பட்டிருக்கும் மேஜைகளுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் ஒரு மேஜையில் 4 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட வேண்டும். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா? என ஒவ்வொரு நிறுவனங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை கடிதம் வழங்கப்படுகிறது. மீண்டும், மீண்டும் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களை மூட உத்தரவிடப்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை மதித்து கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story