இங்கிலாந்து போலீசாருக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ள துபாய் இளவரசி


இங்கிலாந்து போலீசாருக்கு ரகசிய கடிதம்  எழுதியுள்ள துபாய் இளவரசி
x
தினத்தந்தி 25 Feb 2021 5:24 PM GMT (Updated: 25 Feb 2021 5:24 PM GMT)

தான் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கடத்தப்பட்ட தன் சகோதரியைக் காப்பாற்றுமாறு இங்கிலாந்து போலீசாருக்கு ரகசியமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் துபாய் இளவரசி.

லண்டன்

தனது தந்தை தன்னை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாக கூறும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய துபாய் இளவரசி லத்தீபா  (34), தற்போது  ரகசியமாக பிரித்தானிய போலீசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், 2000ஆவது ஆண்டு தன் தந்தையால் கடத்தப்பட்ட தன் சொந்த சகோதரியான ஷம்சா (38)இன் வழக்கை மீண்டும் துவக்குமாறு இங்கிலாந்து  போலீசாரிடம் மன்றாடிக்கேட்டுக்கொண்டுள்ளார் .

தன் சகோதரி ஷம்சா வழக்கோ, விசாரணையோ, குற்றச்சாட்டுகளோ இன்றி, யாரும் தொடர்பு கொள்ள முடியாத தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் அவருக்கு பிரம்படி கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம்தான், ஜோர்டான் ராணியான நூர், இளவரசி ஷம்சா எங்கே என்று கேள்வி எழுப்பியிருந்தார்.ஜோர்டான் ராணியான நூர், துபாய் மன்னரான ஷேக் முகமதை விட்டு சமீபத்தில் இங்கிலாந்துக்கு ஓடிப்போன மனைவியான இளவரசி ஹயாவின் சித்தி ஆவார். அத்துடன், அவர் காணாமல் போனவர்கள் குறித்த சர்வதேச ஆணையத்தின் உறுப்பினரும் என்பது குறிப்பிடத்தக்கது. 2000ஆம் ஆண்டு, துபாய் அரசருக்கு சொந்தமான இங்கிலாதின்  சர்ரேயிலுள்ள எஸ்டேட் ஒன்றிலிருந்து தப்பியோடினார் இளவரசி ஷமசா. அப்போது அவருக்கு வயது 18.

அரசரின் உத்தரவின் பேரில் அவர் பிடிக்கப்பட்டு, மயக்கமருந்து செலுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை ஷம்சா என்ன ஆனார் என்பது வெளி உலகுக்கு தெரியாமலே இருந்தது.இந்நிலையில்தான், அவரது தங்கையான இளவரசி லத்தீபா இங்கிலாந்து போலீசாருக்கு ரகசியமாக கடிதம் ஒன்றை எழுதி தன் அக்காவுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்கதை....

துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த 30 பிள்ளைகளில் ஒருவர் இளவரசி  லத்தீபா அல்-மக்தூம்  (35). அவர்  தந்தையின் பிடியிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒரு நாள், லத்தீபா அல்-மக்தூம் வின் உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த டினா ஜவுஹைனென்  என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்புகிறார்.

எட்டு நாட்களுக்குப் பின், இந்தியப் பெருங்கடலில், படகு ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டேன் என லத்தீபா நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரம், எதிர்பாராத ஒரு பயங்கரம் நிகழ்கிறது.

படகுகளில் வந்த அமீரக போலீசார் லத்தீபா   இருந்த படகை சூழ்ந்துகொள்கிறார்கள். கதறக் கதற முரட்டுத்தனமாக கையாளப்படும் இளவரசிக்கு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.

கண் விழிக்கும்போது, துபாயில் ஒரு அறையில் இருக்கிறார் அவர். அங்கிருக்கும் ஒரு காவலாளி லத்தீபாவிடம், நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்கிறார்!

இதற்கிடையில் லத்தீபாவுடன் கைது செய்யப்பட்ட பின்லாந்து நாட்டவரான டினா இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார்.

விடுவிக்கப்பட்டதும், அவர் இளவரசி லத்தீபாவின் கதையை வெளி உலகுக்கு சொல்கிறார். ஐக்கிய நாடுகள் துபாய் மன்னரை நெருக்குகின்றன. என்ன நடக்கிறது, லத்தீபா உயிருடன் இருக்கிறாரா என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட, லத்தீபாவை சந்திக்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர் ஆணையரான மேரி ராபின்சன்  வருகிறார்.

ஆனால், மேரி ராபின்சனிடம்  லத்தீபாவுக்கு  மன நல பிரச்சினை என்றும்,லதிபாவிடம் நண்பர் ஒருவர் உன்னைப் பார்க்க வருகிறார், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் பொய் சொல்லி இருவரையும் சந்திக்கவைக்கிறார்கள்.

லத்தீபா மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்களை மேரி ராபின்சன்  வெளியிடுகிறார்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு லத்தீபாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது டினாவுக்கு... தான் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது முதல் தனக்கு என்னென்ன நடந்தது என பல விஷயங்களை ஒரு குளியலறையில் மறைந்திருந்துகொண்டு தெரிவிக்கிறார்  லத்தீபா .பின்னர்  மீண்டும் லத்தீபா விடமிருந்து வரும் அழைப்புகள் நின்றுபோகிறது, ஒருவேளை அவர் மொபைல் பயன்படுத்தும்போது பிடிபட்டு, அவரது மொபைல் பறிக்கப்பட்டிருக்கலாம்! தற்போது, அவர் வெளியிட்ட வீடியோக்களை ஒவ்வொன்றாக உலகின் பார்வைக்கு வைக்கிறார் டினா.

Next Story