சிங்கப்பூரில் வேலைக்காரப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி பெண்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Feb 2021 10:37 PM GMT (Updated: 25 Feb 2021 10:37 PM GMT)

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தனது வீட்டின் வேலைக்காரப் பெண்ணை சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசித்து வருபவர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவியான இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன். இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண் வேலைக்காரியாக கடந்த 2015-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். ஏழ்மை காரணமாகவும், தனது 3 வயது மகனை காப்பாற்றவும் சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் வேலைக்கார பெண் பியாங்நகாய்டான் திடீரென்று உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அங்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலில் 31 காய வடுக்கள், 47 வெளிப்புற காயங்கள் இருந்தன. பின்னர் இதுதொடர்பாக காயத்ரி முருகையனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேலைக்கார பெண்ணை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பியாங் நகாய்டான் வீட்டு வேலைக்கு சேர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு அவரை காய்த்ரி சித்ரவதை செய்யத் தொடங்கினார்.

பியாங்நகாய்டானுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்து உதைத்தார். இதுபோன்று தினமும் பல்வேறு சித்ரவதை செய்துள்ளார். இதில் மூளையில் காயம் அடைந்து இறந்துள்ளார். இறக்கும் போது பியாங் நகாய்டான் உடல் எடை 24 கிலோவாக மட்டுமே இருந்தது. அப்போது அவர் ஜன்னல் கம்பியில் கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காயத்ரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Next Story