பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது


பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 28 Feb 2021 2:22 AM GMT (Updated: 28 Feb 2021 2:22 AM GMT)

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

அபுதாபி,

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இது குறித்து அபுதாபி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி..

அபுதாபி நகரில் பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு உதவும் வகையில் பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஷேக் ஜாயித் சாலை அருகில் புதிதாக அல் குரம் கடற்கரை பகுதியானது கடந்த 2 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி மேம்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் இந்த புதிய கடற்கரை பகுதியானது பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இங்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் ஒவ்வொருவரும் தங்களது உடலை சிறப்பாக வைத்துக் கொள்ள முடியும். 3.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த நடைப்பயிற்சி செய்யும் இடம் உள்ளது. உடற்பயிற்சி மட்டுமல்லாது யோகா செய்யக்கூடிய வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சைக்கிள் ஓட்டும் வகையிலும் இங்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டால்பின் பூங்கா

இதுமட்டுமல்லாமல் இந்த பகுதிக்கு வரும் குழந்தைகள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தொலைநோக்கி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்களும் இடம் பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கு பொழுதுபோக்குக்கு உதவும் வகையில் டால்பின் பூங்கா இங்குள்ளது. இந்த பகுதியில் குடும்பத்தினர் இறைச்சியை சுட்டு சாப்பிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் பெரிய இடம் இந்த பகுதியில் உள்ளது.

இதனால் இந்த பகுதியானது பொதுமக்கள் தங்களது பொழுதை கழிக்க உதவும் சிறந்த இடமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story