நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுவிப்பு; கவர்னர் அறிவிப்பு


நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளும் விடுவிப்பு; கவர்னர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 March 2021 2:44 PM GMT (Updated: 2 March 2021 2:44 PM GMT)

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அனைத்து 317 மாணவிகளும் பாதுகாப்புடன் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ். மற்றும் போகோஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  போகோஹராம் பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, பள்ளி மாணவ-மாணவிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாநிலத்தில் ஜங்கிபே என்ற கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.  இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வந்தனர்.  கடந்த வெள்ளி கிழமை மாலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் வகுப்பறைகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 317 மாணவிகளை சிறைபிடித்தனர்.  எனினும் இந்த எண்ணிக்கை 279 என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஜம்பாரா மாநில கவர்னர் பெல்லோ மடாவல்லே இன்று கூறும்பொழுது, தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை அடுத்து, எங்களுடைய முயற்சியின் பயனாக, பயங்கரவாதிகளிடம் இருந்து பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.  யாருக்கும் பிணை தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்த 800 மாணவர்களில் 344 பேரை, கடந்த ஆண்டு டிசம்பர் 11ந்தேதி கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.  இதன்பின்னர், கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டனர்.

கடந்த 2014ம் ஆண்டு சிபோக் நகரின் வடகிழக்கில் பள்ளி ஒன்றில் இருந்த 270 மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்தி சென்றது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Next Story