அபுதாபி சாலையில் விதிமுறையை மீறி ஆபத்தான முறையில் வேனை ஓட்டி சென்ற டிரைவர் கைது
அபுதாபி சாலையில் விதிமுறையை மீறி ஆபத்தான முறையில் வேனை ஓட்டி சென்ற டிரைவர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் அபுதாபி போலீசார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-
அபுதாபி,
அபுதாபி நகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்றை டிரைவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமலும், சிக்னல் கொடுக்காமலும் திடீரென்று தனது வழித்தடத்தை மாற்றி ஆபத்தான வகையில் வேனை ஓட்டி சென்று கொண்டிருந்தார். இதுபோல் அவர் 3 முறை விதிமீறல்களில் ஈடுபட்டார்.
இதனை அந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்து விட்டனர். உடனடியாக அந்த வேன் டிரைவரை மடக்கி பிடித்தனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அப்போது அந்த டிரைவருக்கு போக்குவரத்து விதிமுறைகளை முறையாக மதித்து நடக்க அறிவுரை கூறினர். வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் சாலை விதிகளை சரியாக மதித்து நடக்க வேண்டும். இதன் மூலம் விபத்து உள்ளிட்டவை ஏற்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.