மேகன் மார்க்கெலுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு


மேகன் மார்க்கெலுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2021 1:24 AM GMT (Updated: 3 March 2021 1:24 AM GMT)

தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகன் மார்க்கெலுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹாரி-மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெள்யேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன், இளவரசி மேகனை, மறைந்த அவரது மாமியாரும், இளவரசர் ஹாரியின் தாயாருமான இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

மேகன் மார்க்கெல் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை இங்கிலாந்து நாளிதழ் ‘மெயில்’ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர். தனது மனைவி மேகனை ஊடகத்தினர் பின்தொடர்வது குறித்து இளவரசர் ஹாரி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் மேகன் மார்க்கெல் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தவறு என்று சுட்டிக்காட்டியதோடு, மேகனுக்கு ‘மெயில்’ பத்திரிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

Next Story