ஒரே நாளில் 17 பேர் பலி: அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது


ஒரே நாளில் 17 பேர் பலி: அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 4 March 2021 11:12 PM GMT (Updated: 4 March 2021 11:12 PM GMT)

அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுகுறித்து அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அபுதாபி,

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரத்து 797 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.

இதில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 691 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,286 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 13 ஆயிரத்து 641 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story