சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்


சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 March 2021 1:28 AM GMT (Updated: 6 March 2021 1:28 AM GMT)

சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரியை சந்தித்த சீனாவுக்கான இந்திய தூதர் கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெற வலியுறுத்தினார்.

பீஜிங்,

லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப்பெற்று பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் பலனாக கடந்த பிப்ரவரி 10ந்தேதி முதல் கிழக்கு லடாக்கில் படை விலக்கல் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொண்டன.

இந்நிலையில், சீனாவின் பீஜிங் நகரில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரி லுவோ ஜாவோஹுய் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் சந்தித்து பேசினர்.  டோக்லாம் விவகாரத்தின்பொழுது, இந்தியாவுக்கான சீன தூதராக லுவோ இருந்துள்ளார்.

இந்த சந்திப்பில், கிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து படைகளை முழுவதும் வாபஸ் பெற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது.  இதனால், எல்லை பகுதியில் அமைதி திரும்ப உதவியாக அமையும் என்றும் இருதரப்பு உறவில் வளர்ச்சிக்கான நிலைகளை வழங்கும் என்றும் பேசப்பட்டது.

Next Story