பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வென்றது
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் பிரதமராக உள்ளார்.
இவரது அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்கிற பெயரில் கூட்டணியை அமைத்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்கு அண்மையில் நடைபெற்ற செனட் சபை (நாடாளுமன்ற மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளரும், நிதி மந்திரியுமான அப்துல் ஹபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் கூட்டணி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசூப் ராஸா கிலானி தோற்கடித்தாா். இந்த தோல்வி, பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதையடுத்து, இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமா் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.
அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தாா். இதனை ஏற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது. வெளியுறவு மந்திரி மஹ்மூத் குரேஷி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அசாத் கைசர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்கூட்டணி உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் 178 உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில் அதை விட கூடுதலான ஆதரவுடன் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.