ஜெர்மனி ஆஸ்பத்திரியில் ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் மரணம்


ஜெர்மனி ஆஸ்பத்திரியில் ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் மரணம்
x

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்து வந்தவர், ஹமேட் பக்காயோகோ (வயது 56).

அங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த அமடோ கோன் கூலிபாலியின் திடீர் மரணத்தை தொடர்ந்து, பக்காயோகோ அந்த நாட்டின் பிரதமராக கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதிதான் பதவிக்கு வந்தார்.

இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் முதலில் பாரீஸ் நகரில் சிகிச்சை பெற்றார். பின்னர் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரெய்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு அதிபர் அலசேன் குவாட்டாரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “ஹமேட் பக்காயோகோ மிகச்சிறந்த அரசியல்வாதி, இளைஞர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார். முன்மாதிரியான விசுவாசமுள்ள மனிதர்” என புகழாரம் சூட்டி உள்ளார்.

மறைந்த ஹமேட் பக்காயோகோ பத்திரிகை நிர்வாகியாக இருந்து, அரசியலில் குதித்து, அந்த நாட்டின் பிரதமராக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் பதவியுடன் அந்த நாட்டின் ராணுவ மந்திரி பொறுப்பையும் ஹமேட் பக்காயோகோ வகித்து வந்தார்.

அவரது மறைவை அடுத்து அங்கு இடைக்கால பிரதமராக பேட்ரிக் ஆச்சி நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவ மந்திரி பதவியில் அந்த நாட்டு அதிபரின் தம்பதியான டெனே பிரகிமா குவாட்டாரா இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story